ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் தொடர்ச்சியாக நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்
ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் தொடர்ச்சியாக நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் மூவர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் என ஐக்கிய அரபு அமீரகப் பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.அத்துடன், இந்தத் தாக்குதல்களின் காரணமாக இலங்கை பிரஜை ஒருவர் உட்பட பல்வேறு நாடுகளையும் சேர்ந்த 58 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகளை மீறி வந்த ஈரானிய ட்ரோன்கள் தரையில் விழுந்து வெடித்ததாலேயே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.ஈரான் ஐக்கிய அரபு அமீரகத்தை நோக்கி 165 பலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளதுடன், அவற்றில் 152 ஏவுகணைகளைப் பாதுகாப்புத் தரப்பினர் வானிலேயே அழித்து வெற்றி கண்டுள்ளனர்.
எஞ்சிய 13 ஏவுகணைகள் கடலில் விழுந்துள்ளன. இதற்கு மேலதிகமாக, இரண்டு குரூஸ் ஏவுகணைகளும் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.ஈரான் ஒட்டுமொத்தமாக 541 ட்ரோன்களைத் தாக்குதலுக்குப் பயன்படுத்தியுள்ளதுடன், அவற்றில் 506 ட்ரோன்கள் இடைநடுவிலேயே வீழ்த்தப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், 35 ட்ரோன்கள் அமீரகத்தின் நிலப்பரப்பிற்குள் விழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் இந்தப் போர்ச் சூழலுக்கு மத்தியில், ஐக்கிய அரபு அமீரகம் தனது வான் பாதுகாப்பு அமைப்புகளை உச்சக்கட்ட நிலையில் செயற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இதேவேளைஈரானை இலக்கு வைத்து ஆரம்பிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் போது மூன்று அமெரிக்கப் படைவீரர்கள் உயிரிழந்துள்ளதை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.
ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அமெரிக்கத் தரப்பில் பதிவான முதலாவது உயிரிழப்புகள் இவை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கையின் போது மேலும் ஐந்து படைவீரர்கள் பலத்த காயமடைந்துள்ளதாக அந்நாட்டு இராணுவ அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
ஈரானுக்கு எதிரான இந்த இராணுவ நடவடிக்கையை அறிவித்திருந்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முன்னதாகவே எச்சரிக்கை விடுத்திருந்தார். “அமெரிக்க வீரர்களின் உயிர்கள் பறிபோகலாம், போரின் போது இத்தகைய உயிரிழப்புகள் சாதாரணமானவை” என அவர் தெரிவித்திருந்தார்.

